போட்டிப்போட்டு மது குடித்த முதியவர் பலி


போட்டிப்போட்டு மது குடித்த முதியவர் பலி
x

விபரீத விளையாட்டால் போட்டிப்போட்டு மது குடித்த முதியவர் பலியான சோக சம்பவம் ஹாசன் அருகே நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஹாசன்:

விபரீத விளையாட்டால் போட்டிப்போட்டு மது குடித்த முதியவர் பலியான சோக சம்பவம் ஹாசன் அருகே நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீயா-நானா போட்டி

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா சிகரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் திம்மேகவுடா (வயது 60). தொழிலாளி. இவருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான தேவராஜுடன், கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே அமர்ந்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே அதிக மது குடிப்பது யார் என்பது தொடர்பாக நீயா?- நானா? போட்டி எழுந்துள்ளது.

அப்போது திம்மேகவுடா அரை மணி நேரத்தில் 90 மில்லி அளவிலான 10 மது பாக்கெட்டுகளை குடித்துவிடுவேன் என்று கூறியுள்ளார். அதற்கு தேவராஜு நானும் அதே அளவு மது குடித்துவிடுவேன் என சவால் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் அரை மணி நேரத்தில் தலா 900 மில்லி லிட்டர் மதுவை குடிக்க வேண்டும் என்ற விபரீத சவால் விளையாட்டுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

ரத்த வாந்தி எடுத்தார்

இதற்கு அதே பகுதியில் சட்டவிரோதமாக மது விற்று வரும் கிருஷ்ண கவுடா என்பவர், 90 மில்லி எடை கொண்ட 10 மது பாக்கெட்டுகளை கொடுத்துள்ளார். இதனால் இருவரும் போட்டிப்போட்டு மது பாக்கெட்டுகளை குடித்துள்ளனர்.

சவாலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என நினைத்த திம்மேகவுடா அவசரம் அவசரமாக மதுவை குடித்துள்ளார். ஒருக்கட்டத்தில் போதை தலைக்கேறியதுடன் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். உடனே அங்கிருந்து தேவராஜும், கிருஷ்ணகவுடாவும் தப்பி ஓடிவிட்டனர்.

பரிதாப சாவு

இதனால் திம்மேகவுடா பஸ் நிறுத்தத்திலேயே மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அப்பகுதியை சேர்ந்த சிலர் அவரது கை, கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு வந்து அவரது வீட்டில் விட்டனர். ஆனால் அவரது குடும்பத்தினர் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர்.

இதனால் அவரை கவனிக்க யாரும் இல்லாத நிலையில், அளவுக்கு அதிகமாக மதுகுடித்த திம்மேகவுடா இறந்துபோனார். நேற்று காலை குடும்பத்தினர் வீட்டுக்கு வந்த போது தான் திம்மேகவுடா இறந்ததும், போட்டிப்போட்டு மது குடித்ததில் அவர் இறந்ததும் தெரியவந்தது.

போலீஸ் தீவிர விசாரணை

இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஒலேநரசிப்புரா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இறந்துபோன திம்மேகவுடா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒலேநரசிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக திம்மேகவுடா குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் தேவராஜு, கிருஷ்ணகவுடா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story