இந்தியா கூட்டணிக்குள் அதிகரிக்கும் மோதல்... மம்தா மீது காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் கடும் விமர்சனம்


இந்தியா கூட்டணிக்குள் அதிகரிக்கும் மோதல்... மம்தா மீது  காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் கடும் விமர்சனம்
x

பிரதமர் மோடிக்கு சேவை செய்வதில்தான் மம்தா பானர்ஜி பிசியாக இருக்கிறார் என காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக சாடியுள்ளார்.

கொல்கத்தா,

இந்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 25-க்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்து பிரமாண்ட கூட்டணி அமைத்து உள்ளன. இதற்கு 'இந்தியா' என்ற பெயரும் சூட்டப்பட்டு இருக்கிறது.

இந்த கூட்டணியின் தலைவர்கள் 4 முறை கூடி தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். இதன் கடைசி கூட்டம் கடந்த மாதம் டெல்லியில் நடந்தது. இதில் தொகுதி பங்கீடு, கூட்டு தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்தும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியது.

தேர்தல் நெருங்க நெருங்க இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியை அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்து வந்தார். அதேபோல், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமாரும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜியை அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக சாடியுள்ளார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், மம்தா பானர்ஜி பிரதமருக்கு சேவை செய்வதில்தான் படு பிசியாக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மம்தா பானர்ஜிக்கு விருப்பம் இல்லை. காங்கிரஸ் கட்சியால் தனது சொந்த பலத்தை கொண்டு தனியாகவே போட்டியிட முடியும். நாங்கள் பிச்சை கேட்கவில்லை. மம்தா பானர்ஜிதான் கூட்டணி வேண்டும் என விரும்பினார். எனவே அவருடைய கருணை எங்களுக்கு தேவையில்லை" என்றார்.

தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்களுக்குள் மோதல் அதிகரித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணி கரைசேருமா? என்ற பேச்சுக்களுக்கும் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.


Next Story