கிரிக்கெட் மைதானத்தில் 2 வாலிபர்கள் படுகொலை


கிரிக்கெட் மைதானத்தில் 2 வாலிபர்கள் படுகொலை
x

பெலகாவியில் கிரிக்கெட் மைதானத்தில், 2 வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெலகாவி:

பெலகாவியில் கிரிக்கெட் மைதானத்தில், 2 வாலிபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படுகொலை சம்பவங்கள்...

கர்நாடகத்தில் 2022-ம் ஆண்டில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் இதுபோன்று மோதல்கள் ஏற்பட்டு படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனால் ஒட்டுமொத்த கர்நாடகமே பரபரப்பானது. இந்த நிலையில் பெலகாவியில் மற்றொரு படுகொலை சம்பவம் நடந்துள்ளது.

பெலகாவி தாலுகா சிஞ்சோலி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ்(வயது 22). இவரது நண்பர் கிரீஷ் நாகண்ணா(22). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது மைதானத்திற்கு மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் சிலர் வந்தனர்.

ஆயுதங்களால் தாக்குதல்

அப்போது கிரிக்கெட் விளையாடுவதாகவும், அதனால் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வரவேண்டாம் என இவர்கள் 2 பேரும் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் மர்ம கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தனர். இதையடுத்து மர்மகும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இந்த நிலையில் சம்பவம் குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், வாலிபர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரட்டை கொலை

முதற்கட்ட விசாரணையில் விளையாட்டு மைதானத்திற்குள் மோட்டார் சைக்கிளுடன் வந்ததால் ஏற்பட்ட தகராறில் இந்த இரட்டை கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. எனினும் அவர்கள் 2 பேரையும் முன்விரோதம் காரணமாக கொலை செய்து இருக்கலாம்?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் கமிஷனர் ரவீந்திர கட்டி, உதவி போலீஸ் கமிஷனர் நாராயண் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story