காதலியை கற்பழித்து கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி


காதலியை கற்பழித்து கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை முயற்சி
x

வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடைபெற்றதால் ஆத்திரமடைந்த காதலன், தனது காதலியை கற்பழித்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வில்சன் கார்டன்:

வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடைபெற்றதால் ஆத்திரமடைந்த காதலன், தனது காதலியை கற்பழித்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காதல்

பெங்களூரு கே.பி. அக்ரஹாரா பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரும், வில்சன் கார்டன் அருகே விநாயகாநகர் பகுதியை சேர்ந்த ஷாலினி(வயது 23) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கிடையே ஷாலினிக்கு, அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.

மேலும் நிச்சயதார்த்தத்திற்கும் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து மனோஜுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஷாலினி வீட்டிற்கு மனோஜ் சென்றார். அப்போது அவரது வீட்டில் ஷாலினியை தவிர வேறு யாரும் இல்லை.

திருமண ஏற்பாடுகள்

அந்த சமயத்தில் திருமண ஏற்பாடுகள் குறித்து கேட்ட மனோஜ், உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் அதற்கு ஷாலினி மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், ஷாலினியை மனோஜ் தாக்கி உள்ளார். மேலும் அங்கிருந்த தலையணையை எடுத்து முகத்தில் அமுக்கி மூச்சை திணறடித்து ஷாலினியை கொலை செய்தார்.

இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பித்து தனது வீட்டிற்கு வந்தார். பின்னர், மனோஜ் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை மீட்ட குடும்பத்தினர், உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளியே சென்ற, ஷாலினியின் குடும்பத்தினர் வீடு திரும்பினர்.

கற்பழித்து கொலை

அப்போது மகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து வில்சன் கார்டன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஷாலினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஷாலினியின் காதலனான மனோஜ், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஷாலினிக்கு தொல்லை கொடுத்ததுடன், அவரை படுகொலை செய்தது தெரிந்தது. மேலும் மனோஜ், கொலை செய்வதற்கு முன்பு ஷாலினியை கற்பழித்து இருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story