புகை பிடித்ததை உற்றுப் பார்த்ததால் ஆத்திரம்.. வாலிபரை கொன்ற இளம்பெண் கைது


புகை பிடித்ததை உற்றுப் பார்த்ததால் ஆத்திரம்.. வாலிபரை கொன்ற இளம்பெண் கைது
x

கோப்புப்படம் 

புகை பிடித்ததை உற்றுப் பார்த்ததால் வாலிபருக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள சாலையோர கடையில் ஜெய்ஸ்ரீ (24) என்ற இளம்பெண் ஒருவர், தனது தோழியுடன் சேர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த கடைக்கு ரஞ்சித் (28) என்ற இளைஞர் வந்துள்ளார். கடையின் முன்பு இளம்பெண் புகை பிடித்துக்கொண்டிருப்பதை ரஞ்சித், முறைத்தபடி உற்று பார்த்துள்ளார்.

இதனால் கடுப்பான ஜெய்ஸ்ரீ, ரஞ்சித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், சிகெரெட் புகைத்துக்கொண்டே, புகையை ரஞ்சித்தை நோக்கி விட்டுள்ளார். இதனை ரஞ்சித், தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனால், இளம்பெண்களுக்கும், ரஞ்சித்திற்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

அப்போது ரஞ்சித்தை தாக்குவதற்காக ஜெய்ஸ்ரீ, தனது நண்பரான ஆகாஷ் என்பவரை செல்போனில் அழைத்துள்ளார். அந்த சமயத்தில் ரஞ்சித், தனது வீட்டிற்கு செல்வதற்காக அந்த இடத்தை விட்டு வெளியேறினார். எனினும், ஆத்திரம் தீராத ஜெய்ஸ்ரீ மற்றும் அவரது நண்பர்கள் என 3 பேரும் ரஞ்சித்தை வழிமறித்து தாக்கியுள்ளனர். அப்போது ஜெய்ஸ்ரீ, கத்தியை கொண்டு ரஞ்சித்தை பலமுறை குத்தினார். இதில் ரஞ்சித், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மூவரும் அந்த இடத்தை விட்டு தப்பியோடினர். இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், ரஞ்சித்தின் செல்போனில் பதிவான வீடியோ மற்றும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து, குற்றவாளிகளான ஜெய்ஸ்ரீ மற்றும் அவரது நண்பர்களான சவிதா மற்றும் ஆகாஷ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story