ஒடிசாவில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.பாண்டியனுக்கு கேபினெட் மந்திரிக்கு இணையான பதவி


ஒடிசாவில் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.பாண்டியனுக்கு கேபினெட் மந்திரிக்கு இணையான பதவி
x

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளர் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச்சேர்ந்த கார்த்திகேய பாண்டியனுக்கு அம்மாநில அரசு கேபினெட் மந்திரிக்கு இணையான பதவி அளித்துள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரியாக நவீன் பட்நாயக் பதவி வகித்து வருகிறார். நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ஐ.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன் தனது பணியிலிருந்து நேற்று விருப்ப ஓய்வு பெற்றார்.

மத்திய அரசு அவரது ஓய்வுக்கு ஒப்புதல் அளித்தது. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேய பாண்டியன், 2000-ம் ஆண்டு பேட்ச் ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். 2002-ம் ஆண்டு அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தில் துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அங்கு பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராக பணியாற்றியுள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகவும், அவரது வலது கரமாகவும் இருந்து வந்தார்.

ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்குக்கு அடுத்த இடத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வருகிறார். தற்போது அம்மாநில கேபினெட் மந்திரி அந்தஸ்துக்கு கார்த்திகேய பாண்டியன் உயர்த்தப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் '5டி' திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக வி.கே.பாண்டியன் நியமிக்கப்படுகிறார். இந்த பதவி, கேபினெட் மந்திரிக்கு இணையான பதவி. இனி, இவர் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கீழ் நேரடியாக பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஒடிசா அரசியலில் நேரடியாக வி.கே.கார்த்திகேயன் களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story