ராகுல் காந்தி ஆஜராகும் நாளன்று நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராட்டம் - காங்கிரஸ் திட்டம்


ராகுல் காந்தி ஆஜராகும் நாளன்று நாடு முழுவதும் அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராட்டம் - காங்கிரஸ் திட்டம்
x

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனம் நிதி பற்றாக்குறையில் தவித்ததால், அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடியே 25 லட்சத்தை வட்டியில்லா கடனாக கொடுத்தது.

அந்த கடனை அசோசியேட்டடு நிறுவனம் திருப்பிச் செலுத்த முடியாததால், அதன் பங்குகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கிக்கொண்டது. இதன்மூலம் வெறும் ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், ரூ.90 கோடி கடனுக்காக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகள், பங்குகளை பெற்றுக்கொண்டதாகவும் இதில் முறைகேடு இருப்பதாகவும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத்தொடரப்பட்டது.

இதனிடையே, இந்த பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சோனியா காந்தி, ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை தொடர்பாக நேரில் ஆஜராகும்படி ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

ராகுல் காந்தி கடந்த 2-ம் தேதி, சோனியா காந்தி கடந்த 8-ம் தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், தான் வெளிநாட்டில் இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்கும்படி ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கையை ஏற்று வரும் 13-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு அவகாசம் வழங்கப்பட்டது. அதேபோல், கடந்த 8-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகாத சோனியா காந்தியும் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மேலும் 3 வாரங்கள் கால அவகாசம் வழங்கும்படி சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். இதனால், சோனியா காந்திக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக வரும் 13-ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி நேரில் ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் தற்காலிக பொதுச்செயலாளர் சோனியா காந்தி தலைமையில் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி விசாரணைக்காக ஆஜராகும் 13-ம் தேதி நாடு முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகங்கள் முன் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராகுல் ஆஜராகும் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி 13-ம் தேதி காங்கிரஸ் எம்.பி.க்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாக சென்று அலுவலகம் முன் சத்தியா கிரக போராட்டம் நடத்தவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Next Story