வாரணாசியில் ரூ.360 கோடியில் புதிய சாலை: நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி


புதிய சாலை பனராஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து விமானநிலையம் வரையிலான தூரத்தை 75 நிமிடத்தில் இருந்து 45 நிமிடங்களாக குறைத்துள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இன்று தொடங்கி வைப்பதற்காகவும், வேறு பல நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவும் பிரதமர் மோடி நேற்று இரவு வாரணாசி வந்தார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பிரதமர் மோடி, மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துடன் ஷிவ்பூர் - புல்வாரியா - லஹார்தாரா சாலையை ஆய்வு செய்தார். ரூ.360 கோடி செலவில் போடப்பட்டுள்ள இந்த சாலை பனராஸ் இந்து பல்கலைக்கழகத்திலிருந்து விமானநிலையம் வரையிலான தூரத்தை 75 நிமிடத்தில் இருந்து 45 நிமிடங்களாக மாற்றி போக்குவரத்து நெரிசலையும் குறைத்துள்ளது. அதேநேரத்தில் லஹார்தாராவில் இருந்து கசாஹ்ரி வரையிலான பயண நேரத்தை 30 நிமிடங்களில் இருந்து 15 நிமிடங்களாக குறைத்துள்ளது.

இந்த ஆய்வு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காசியை சென்றடைந்ததும், ஷிவ்பூர் - புல்வாரியா - லஹார்தாரா சாலையை ஆய்வு செய்தேன். சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் நகரத்தின் தெற்கு பகுதியில் இருக்கும் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story