ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது - பிரதமர் மோடி பேச்சு


ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது -  பிரதமர் மோடி பேச்சு
x

நாட்டிற்கு கிறிஸ்தவர்கள் அளித்த பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது.

புதுடெல்லி,

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவிலும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவ பெருமக்கள் ஈடுபட்டனர். நள்ளிரவில் தேவாலயங்கள் திறக்கப்பட்டு சிறப்பு ஜெபக் கூட்டங்களும் நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ சமய பெரியோர்களை சந்தித்து பேசினார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கிறிஸ்தவ சமூகத்தினருடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-

கிறிஸ்துமஸ் திருநாளில் உலக மக்களுக்கும், கிறிஸ்தவ சமுதாயத்தினருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.இத்தகைய சிறப்புமிக்க புனிதமான நாளில் நீங்கள் அனைவரும் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினத்தையும் அவரது போதனைகளையும் கொண்டாடும் நாள் இது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க இயேசு கிறிஸ்து பாடுபட்டார். ஏழைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் சேவை செய்வதில் கிறிஸ்தவ சமூகம் முன்னணியில் உள்ளது. கிறிஸ்தவர்கள் சமூக நீதியின் பக்கம் நிற்பவர்கள்.

பல பள்ளிகளை கட்டிக் கொடுத்துள்ளனர். நாட்டிற்கு கிறிஸ்தவர்கள் அளித்த பங்களிப்பை இந்தியா பெருமையுடன் அங்கீகரிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு,போப் பிரான்சிஸ்சை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகவும் மறக்க முடியாத தருணம் அதுவாகும். சமூக நல்லிணக்கம், உலகளாவிய சகோதரத்துவம், பருவநிலை மாற்றம் போன்றவற்றை குறித்து நாங்கள் இருவரும் விவாதித்தோம். புனித பைபிளில் உண்மைக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story