பிரதமர் இல்ல முற்றுகை போராட்டம் எதிரொலி; டெல்லி மெட்ரோ புது அறிவிப்பு


பிரதமர் இல்ல முற்றுகை போராட்டம் எதிரொலி; டெல்லி மெட்ரோ புது அறிவிப்பு
x

லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ளே செல்ல அல்லது வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை அமலாக்க துறை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். இதற்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த ராகுல் காந்தி, சசி தரூர், மெகபூபா முப்தி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

எனினும், சிறையில் இருந்தபடி கெஜ்ரிவால் அரசை வழிநடத்துவார் என டெல்லி மந்திரி அதிஷி கூறினார். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் நடந்த, இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி இன்று காலை பேரணியாக செல்வது என ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

எனினும், பேரணியோ அல்லது ஊர்வலம் செல்லவோ அனுமதி இல்லை. வாகனங்களை வேறு வழியில் திருப்பி விடும் பணிகளும் நடைபெறாது என்று டெல்லியின் துணை காவல் ஆணையாளர் தேவேஷ் குமார் மஹ்லா இன்று காலை கூறினார்.

இந்நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்ட செய்தியில், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ளே செல்ல அல்லது வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

பட்டேல் சவுக் மெட்ரோ ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் 3 மற்றும் மத்திய செயலகத்தின் மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயில் எண் 5 ஆகியவை அடுத்த அறிவிப்பு வரும்வரை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்ல கூடிய மாணவ மாணவிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர்.


Next Story