கள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: அத்தையை கழுத்தை இறுக்கி கொன்ற வாலிபர்


கள்ளத்தொடர்பை கைவிட்டதால் ஆத்திரம்: அத்தையை கழுத்தை இறுக்கி கொன்ற வாலிபர்
x

சேலையால் அத்தையின் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா அங்குசதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சோமநாத். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சோமநாத் இறந்துவிட்டார்.

இதனால் விஜயலட்சுமி தனது மகனுடன் யாரடோனா கிராமத்தில் குடியேறினார். அங்கு கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்தார். அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான தேவப்பா (வயது 22) என்பவருடன் விஜயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. தேவப்பாவுக்கு விஜயலட்சுமி அத்தை முறையாகும். இருவரும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

இதனால் அவர்கள் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதன்காரணமாக தேவப்பாவும், விஜயலட்சுமியும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அத்துடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளனர். இவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் விஜயலட்சுமியின் அண்ணன் சவுடப்பாவுக்கு தெரியவந்தது. இதனால் அவர் விஜயலட்சுமியையும், தேவப்பாவையும் எச்சரித்துள்ளார்.

இதையடுத்து விஜயலட்சுமி, தேவப்பாவுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக் கொண்டார். தேவப்பா பலமுறை உல்லாசத்துக்கு அழைத்தும் விஜயலட்சுமி செல்ல மறுத்துவிட்டார். இது தேவப்பாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை கொலை செய்ய தேவப்பா திட்டம் தீட்டினார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயலட்சுமி லிங்கசுகுர் அருகே முதாகல் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். அதனை அறிந்த தேவப்பா அங்கு சென்று விஜயலட்சுமியுடன் பேச முயன்றுள்ளார். அப்போதும் தேவப்பாவுடன் பேசுவதை தவிர்த்து விஜயலட்சுமி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து தேவப்பா, கடைசியாக ஒருமுறை உல்லாசமாக இருக்கலாம் என்றும், அதன்பிறகு பிரிந்து சென்றுவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு விஜயலட்சுமியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள மறைவான பகுதிக்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதன்பிறகு தனது திட்டப்படி தேவப்பா, விஜயலட்சுமியை கல்லால் தாக்கி உள்ளார். பின்னர் அவரது சேலையால் விஜயலட்சுமியின் கழுத்தை இறுக்கி உள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அதன்பிறகு தேவப்பா அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் லிங்கசுகுர் போலீசார் விரைந்து வந்து விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளத்தொடர்பை கைவிட்டதால் விஜயலட்சுமியை தேவப்பா கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த தேவப்பாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story