புதிய பாஸ்போர்ட் பெற்றார் ராகுல்காந்தி - இன்று அமெரிக்கா பயணம்


புதிய பாஸ்போர்ட் பெற்றார் ராகுல்காந்தி - இன்று அமெரிக்கா பயணம்
x

கோப்புப்படம்

ராகுல்காந்தி நேற்று தனது புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து இன்று அவர் அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவுடன் தனது எம்.பி. பதவிைய இழந்தார். உடனே தனது சிறப்பு பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். இன்று (திங்கட்கிழமை) அவர் அமெரிக்காவுக்கு செல்வதால், புதிய சாதாரண பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தார். அவர் ேநஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதால், தடையில்லா சான்று கோரி, டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

புகார்தாரரான சுப்பிரமணிய சாமி, சான்று தர எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், கடந்த வெள்ளிக்கிழமை, ராகுல்காந்திக்கு கோர்ட்டு 10 ஆண்டுகளுக்கு பதிலாக, 3 ஆண்டுகளுக்கு பாஸ்போர்ட் அளிக்க தடையில்லா சான்று அளித்தது.

இதைத்தொடர்ந்து, ராகுல்காந்திக்கு ஞாயிற்றுக்கிழமை (நேற்று) சாதாரண பாஸ்போர்ட் வந்து சேரும் என்று பாஸ்போர்ட் அலுவலகம் தகவல் தெரிவித்தது. அதன்படி, நேற்று பிற்பகலில் அவருக்கு பாஸ்போர்ட் வந்து சேர்ந்தது.

இன்று மாலை அவர், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டு செல்கிறார். வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களுக்கும் பயணம் செய்கிறார்.


Next Story