குஜராத்தில் வரும் 22-ந்தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டம்


குஜராத்தில் வரும் 22-ந்தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டம்
x

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து குஜராத்திலும் வெற்றி பெறும் நோக்கில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. மறுபுறம் பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் குஜராத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பிலும் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அவரது யாத்திரை மராட்டிய மாநிலத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், வரும் நவம்பர் 22-ந்தேதி ராகுல் காந்தி குஜராத்திற்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story