ராஜஸ்தான்: மனைவி, இரண்டு மகள்களை கொன்ற கொடூர கணவன்


ராஜஸ்தான்: மனைவி, இரண்டு மகள்களை கொன்ற கொடூர கணவன்
x

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று 3 சடலங்களை மீட்டனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கர்தானி பகுதியில் ஒரு வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனால் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே 3 சடலங்கள் காணப்பட்டன. அவற்றை மீட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதுபற்றி அதிகாரி உதய் சிங் கூறியதாவது,

அந்த வீட்டில் அமித் யாதவ் (40) தனது மனைவி கிரண் (33), மூத்த மகள் பிரியா (11) மற்றும் இளைய மகள் ரியாவுடன் (6) வாழ்ந்து வந்தார். அமித் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருபவர்.

கடந்த 17 ஆம் தேதி இரவு அமித் தனது மனைவி மற்றும் மூத்த மகள் இருவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்களை அடித்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அமித் ஒன்றும் அறியாததுபோல் தனது இளைய மகளுடன் சென்று தூங்கியுள்ளார். மறுநாள், அவர் ரியாவுடன் தனது வீட்டில் சுற்றித் திரிந்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, நேற்று காலை தனது இன்னொரு மகளையும் அதேபோல் அடித்து கொன்றுவிட்டு தப்பிச் சென்று இருக்கிறார். யாதவின் செல்போன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தைக் போலீசார் கண்டறிந்து, அவரை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story