சட்டசபை தேர்தலில் எங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: சந்திரசேகர ராவ்


சட்டசபை தேர்தலில் எங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது: சந்திரசேகர ராவ்
x

கோப்புப்படம்

பா.ஜனதா அரசுக்கு தனியார் மயமாக்கும் வெறித்தனமான கொள்கை உள்ளதாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வரும் 30-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் தெலுங்கானா முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், "மத்திய பா.ஜனதா அரசுக்கு தனியார் மயமாக்கும் வெறித்தனமான கொள்கை உள்ளது. அனைத்தும் தனியார் மயமாக்கப்படுகிறது. எல்.ஐ.சி.யையும் விற்கிறார். ரெயில்வேயும் தனியார் மயமாக்கப்படுகிறது. விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்படுகின்றன.

அதே போல் இங்கு மின்சாரத் துறையையும் தனியார் மயமாக்க விரும்பினர். ஆனால் தெலுங்கானாவில் நாங்கள் அதை மாநில அரசின் கீழ் வைத்திருக்கிறோம். உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் தலித்துகள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், இது ஜனநாயக நாடா...?. சில அரசியல் கட்சிகள் தலித் மக்களை வாக்கு வங்கிகளாகக் கருதுகின்றன.

என்ன வந்தாலும் தெலுங்கானாவில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம், எங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நலத்திட்டங்களை ரத்து செய்து விடுவார்கள். காங்கிரசை ஆதரிப்பதை பொதுமக்கள் நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்வது மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கும் என்று என அவர் கூறினார்.


Next Story