டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாட்கள் சிபிஐ காவல்...!


டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு மேலும் 2 நாட்கள் சிபிஐ காவல்...!
x

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரியை சிபிஐ கைது செய்தது.

டெல்லி,

மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சிபிஐ கடந்த 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக கைது செய்தது. விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த 26-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மணிஷ் சிசோடியா ஆஜரான நிலையில் அவரிடம் 8 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிசோடியாவை 4-ம் தேதி வரை (இன்று வரை) சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி ரோஸ் அவனியூ சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, மணிஷ் சிசோடியா சிபிஐ காவலில் அடைக்கப்பட்டார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சிபிஐ காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் டெல்லி ரோஸ் அவனியூ சிபிஐ சிறப்பு கோர்ட்டில் மணிஷ் சிசோடியா இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவை காவலில் எடுத்து விசாரிக்க மேலும் 3 நாட்கள் அவகாசம் தரும்படி சிறப்பு கோர்ட்டில் சிபிஐ முறையீடு செய்தது. அதேவேளை இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கும்படி மணிஷ் சிசோடியா முறையீடு செய்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கோர்ட்டு, மணிஷ் சிசோடியாவை மேலும் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, மணிஷ் சிசோடியா வரும் 6-ம் தேதி (திங்கட்கிழமை) வரை சிபிஐ காவலில் இருக்க உள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர்.

முன்னதாக, கைது நடவடிக்கையை எதிர்த்து மணிஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் தொடர்பான வழக்கை முதலில் டெல்லி ஐகோர்ட்டில் தொடருங்கள் என்று உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story