கொரோனா தொற்று நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது - காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்


கொரோனா தொற்று நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது - காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்
x

நாடு ‘இந்து பாகிஸ்தானாக’ மாறுவதில் இருந்து கொரோனா தொற்று காப்பாற்றியது என காங்கிரஸ் தலைவர் சசிதரூர் கூறியுள்ளார்.

இந்து பாகிஸ்தான்

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர், மும்பையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆளும் பா.ஜனதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாகும். பத்திரிகையாளர்களின் சுதந்திரத்திற்கு எங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும்.

2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால் " இந்து பாகிஸ்தானை" அவர்கள் உருவாக்க முயற்சிப்பார்கள் என்று எச்சரித்தேன்.

2019-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இந்த அரசு முத்தலாக் மற்றும் காஷ்மீரின் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் எனது கணிப்பு சரியாகும் நாள் தொலைவில் இல்லை என்று தோன்றியது.

காப்பாற்றிய கொரோனா

ஆனால் கொரோனா தொற்று தான் நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது. தொற்றுநோயை கையாளுவதற்கான அவசர தேவை காரணமாக நாடாளுமன்றம் செயல்படுவது ஸ்தம்பித்தது.

தனியார் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒவ்வொரு தன்னாட்சி நிறுவனத்திற்கும் தலைமை பதவிக்கு ஆட்களை நியமிக்கும்போது அவர்களின் அரசாங்க விசுவாசம் சோதிக்கப்படுகிறது.

சுதந்திரமான மற்றும் நேர்மையான நபர்களை நியமித்ததன் மூலம் தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி அதிகாரம் காப்பாற்றப்பட்ட காலம் முன்பு இருந்தது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மற்றும் ஜே.எம். லிண்டே ஆகியோரை இதற்கு உதாரணமாக கூறலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story