உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - 3 பேர் கைது


உத்தர பிரதேசத்தில் வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - 3 பேர் கைது
x

வந்தே பாரத் ரெயில் மீது கற்களை வீசி தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

லக்னோ,

நாடு முழுவதும் பல்வேறு மாநில ரெயில்வே வழித்தடங்களில் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அனைத்து ரெயில்களின் இயக்கத்தையும் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த ஜூலை 7-ந்தேதி உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூர்-லக்னோ இடையிலான வழித்தடத்தில் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இந்த ரெயில் இன்று லக்னோ நோக்கி சென்று கொண்டிருந்த போது, சொஹாவால் பகுதி அருகே சிலர் ரெயிலின் மீது சிலர் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இது தொடர்பாக ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி ரெயில் மீது கற்களை வீசி தாக்கிய நன்னு பஸ்வான், அவரது மகன்கள் அஜய் மற்றும் விஜய் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நன்னு பஸ்வானுக்குச் சொந்தமான 6 ஆடுகள் கடந்த 9-ந்தேதி வந்தே பாரத் ரெயிலில் அடிபட்டு இறந்து போனதால், அந்த ஆத்திரத்தில் ரெயில் மீது அவர்கள் மூவரும் கற்களை வீசி தாக்கியதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story