பெங்களூருவை காங்கிரசின் ஏ.டி.எம்.மாக மாற்ற சுர்ஜேவாலா நேரிடையாக களம் இறங்கி உள்ளார்; ஆர்.அசோக் குற்றச்சாட்டு


பெங்களூருவை காங்கிரசின் ஏ.டி.எம்.மாக மாற்ற சுர்ஜேவாலா நேரிடையாக களம் இறங்கி உள்ளார்; ஆர்.அசோக் குற்றச்சாட்டு
x

பெங்களூருவை காங்கிரஸ் மேலிடத்தின் ஏ.டி.எம்.யாக மாற்ற, கர்நாடக தலைவர்களை நம்பாமல் சுர்ஜேவாலாவை நேரிடையாக களம் இறங்கி உள்ளார் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் அலுவலகமாக மாற்ற...

பெங்களூருவில் மாநகராட்சி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பங்கேற்று இருக்கிறார். அவரது தலைமையிலேயே இந்த கூட்டம் நடைபெற்றிருக்கிறது. மாநகராட்சி அலுவலகத்தை காங்கிரஸ் அலுவலகமாக மாற்ற மந்திரிகள் முயற்சிக்கிறார்கள்.

பெங்களூரு வளர்ச்சி, மாநகராட்சி தேர்தல், வார்டு மறுவரையறை குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசிக்க சுர்ஜேவாலா யார்?, அவர் மந்திரியா?, கர்நாடக அரசில் எந்த பொறுப்பில் இருக்கிறார். அதிகாரிகளுடன், சுர்ஜேவாலா ஆலோசனை நடத்தியது குறத்து கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து பா.ஜனதா சார்பில் புகார் அளித்துள்ளோம்.

காங்கிரஸ் மேலிடத்தின் ஏ.டி.எம்.

அதிகாரிகளுடன், சுர்ஜேவாலா ஆலோசனை நடத்தியதற்கான ஆவணங்களையும் கவர்னரிடம் வழங்கி உள்ளோம். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த கவர்னரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிகார மதம் ஏறி விட்டது. இந்த ஆலோசனை கூட்டம் சுர்ஜேவாலா தலைமையில் நடந்ததும், அதிகாரிகள் அங்கிருந்து எழுந்து சென்றிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இதன்மூலம் இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் அலட்சியமும், தவறும் இருக்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தலின் போது கர்நாடகத்தை காங்கிரஸ் மேலிடம் ஏ.டி.எம். ஆக்க முயற்சிப்பார்கள் என்று பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூறி இருந்தார்கள். தற்போது பெங்களூருவை காங்கிரஸ் மேலிடத்தின் ஏ.டி.எம்.மாக மாற்ற நினைக்கிறார்கள். இதற்காக கர்நாடக தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் நம்பவில்லை. இதன் காரணமாக தான் பெங்களூருவை ஏ.டி.எம்.மாக மாற்ற சுர்ஜேவாலாவே நேரிடையாக களம் இறங்கி உள்ளார்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story