துப்பாக்கி குண்டு காயத்துடன் வாலிபர் பிணமாக மீட்பு


துப்பாக்கி குண்டு காயத்துடன் வாலிபர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 17 Jan 2023 6:45 PM GMT (Updated: 17 Jan 2023 6:47 PM GMT)

வீட்டில் இருந்து மாயமான நிலையில் காபி தோட்டத்தில் துப்பாக்கி குண்டு காயத்துடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடகு:

வீட்டில் இருந்து மாயமான நிலையில் காபி தோட்டத்தில் துப்பாக்கி குண்டு காயத்துடன் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் சென்றார்

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா கார்வாலே கிராமத்தை சேர்ந்தவர் நபந்தா குஷப்பா. விவசாயி. இவரது மகன் ராஜேஷ் சங்கப்பா (வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது காரில் வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்துபோன பெற்றோர் அக்கம்பக்கத்தில் விசாரித்தனர்.

ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. நண்பர்கள் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என அவர்கள் நினைத்தனர். இந்த நிலையில் ராஜேஷ் சங்கப்பா, பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கார்வாலே கிராமத்தின் புறநகர் பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

காபி தோட்டத்தில்...

இதனால் பதறிப்போன பெற்றோர் உடனடியாக இதுகுறித்து சோமவார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் ஆண் பிணம் கிடப்பதாக சோமவார்பேட்டை போலீசாருக்கு அந்த பகுதியினர் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காபி தோட்டத்தில் இறந்து கிடந்தவர் ராஜேஷ் சங்கப்பா என்பது தெரிந்தது. அவர் உடலில் குண்டு காயம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணை நடத்தினர்.

துப்பாக்கியால் சுட்டு

விசாரணையில் அவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைத்துப்பாக்கி ஒன்று வாங்கி இருந்ததும், தற்போது அவர் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனவும் போலீசார் கூறினர். ஆனால் அவர் எதற்காக காபி தோட்டத்திற்கு வந்து, தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என தீவரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story