'கூட்டணி தொடர்பாக தெலுங்கு தேசம்-பா.ஜ.க. இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது' - சந்திரபாபு நாயுடு


கூட்டணி தொடர்பாக தெலுங்கு தேசம்-பா.ஜ.க. இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது - சந்திரபாபு நாயுடு
x

Image Courtesy : @JaiTDP

பா.ஜ.க.-தெலுங்கு தேசம் கட்சி ஒன்றிணைவது நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகரமான சூழ்நிலையை உருவாக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன. அங்கு இந்த ஆண்டு ஒரே சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.

இது தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் நேரில் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் கொள்கை அடிப்படையில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ரவீந்திர குமார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கூட்டணி தொடர்பாக டெல்லியில் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோருடன் இன்று சந்திரபாபு நாயுடு 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, "ஆந்திர பிரதேச மாநிலம் மிகவும் மோசமாக அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ஜ.க.வும், தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்றிணைவது நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகரமான சூழ்நிலையை உருவாக்கும். கூட்டணி தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க. மற்றும் ஜன சேனா இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் இந்த கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.


Next Story