மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு


மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு
x

Image Courtesy : PTI

பா.ஜ.க.வுடன் கொள்கை அடிப்படையில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்றைய தினம் டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை தெங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திர குமார், "பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஜன சேனா ஆகிய கட்சிகள் மக்களவை தேர்தலில் கொள்கை அடிப்படையில் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளன" என்று தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாணும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன. அங்கு இந்த ஆண்டு ஒரே சமயத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story