'தி கேரளா ஸ்டோரி' பட தயாரிப்பாளரை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் - முன்னாள் மந்திரி சர்ச்சை பேச்சு


தி கேரளா ஸ்டோரி பட தயாரிப்பாளரை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் - முன்னாள் மந்திரி சர்ச்சை பேச்சு
x

‘தி கேரளா ஸ்டோரி’ பட தயாரிப்பாளரை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் என மராட்டிய முன்னாள் மந்திரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

மும்பை,

விபுல்ஷா தயாரிப்பில் டைரக்டர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த 2 மாணவிகள், ஒரு கிறிஸ்தவ மத மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய மத மாணவி மூளைச்சலவை செய்து மத மாற்றம் செய்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ப்பது போன்றும், அதன்பின் நடந்த சம்பவங்களை உள்ளடக்கியதாக இந்த படம் அமைந்துள்ளது.

இதனிடையே, இந்த திரைப்படத்தை வெளியிட மேற்குவங்காள அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போதிய வருவாய் இல்லை என்ற காரணத்தை கூறி தமிழ்நாட்டில் தியேட்டர் நிர்வாகம் இந்த திரைப்படத்தை திரையிடாமல் நிறுத்தியுள்ளது. கேரளாவிலும் இந்த திரைப்படம் திரையிடப்படவில்லை. இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' பட தயாரிப்பாளரை பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் என மராட்டிய முன்னாள் மந்திரி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இது தொடர்பாக மராட்டிய மாநிலம் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜிதேந்திர அவ்கத் கூறுகையில்,

'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட குழுவினர் கேரளாவின் நன்மதிப்பை அவமதித்தது மட்டுமின்றி கேரள பெண்களையும் அவமதித்துவிட்டனர். கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் பெண்கள் மாயமாகிவிட்டதாகவும் அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்துவிட்டதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் உண்மையில் 3 பேர் தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். இந்த திரைப்படம் புனையப்பட்ட கதை. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்' என்றார்.





Next Story