'சமூகத்துக்கு அநீதி இழைத்தவர்கள் நியாய யாத்திரைக்கு தயாராகிறார்கள்' - ஜே.பி.நட்டா தாக்கு


சமூகத்துக்கு அநீதி இழைத்தவர்கள் நியாய யாத்திரைக்கு தயாராகிறார்கள் -  ஜே.பி.நட்டா தாக்கு
x

கோப்புப்படம்

தங்கள் குடும்பத்துக்கு வெளியே யாரையும் பற்றி சிந்திக்காதவர்கள் இன்று நாட்டை பற்றி பேசுவதாக ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

லக்னோ,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் யாத்திரை செல்ல திட்டமிட்டு உள்ளார். மணிப்பூரில் இருந்து மும்பை வரை செல்லும் இந்த யாத்திரைக்கு பாரத நியாய யாத்திரை என பெயரிடப்பட்டு உள்ளது.

67 நாட்கள் நடைபெறும் இந்த பயணம் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. காங்கிரசின் இந்த நியாய யாத்திரையை பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக குறைகூறியுள்ளார்.

லக்னோவில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "இந்தியாவை கடந்த பல ஆண்டுகளாக ஒன்றுபடுத்த எந்த முயற்சியும் எடுக்காதவர்கள் இந்திய ஒற்றுமை பயணத்துக்கு (பாரத் ஜோடோ யாத்திரை) புறப்பட்டனர். சமூகத்துக்கு அநீதி இழைத்தவர்கள் இப்போது 'நியாய யாத்திரை' நடத்துவது பற்றி சிந்திக்கிறார்கள். தங்கள் குடும்பத்துக்கு வெளியே யாரையும் பற்றி சிந்திக்காதவர்கள் இன்று நாட்டை பற்றி பேசுகிறார்கள்.

நாட்டின் வளர்ச்சியை தடுப்பதையே குறிக்கோளாக கொண்டு எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. ஒருபுறம், நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்லும் மோடிஜியும், இன்னொருபுறம், நாட்டை வளர்ச்சி அடையாமல் தடுப்பதில் குறியாக இருக்கும் இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியும் நம்மிடம் உள்ளது. அவர்கள் நாட்டை பின்னோக்கி இழுக்க போட்டி போடுகிறார்கள். மோடி ஜி தலைமையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல நாங்கள் போராடுகிறோம்.

பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் என்ற 4 சாதியினரையே பிரதமர் மோடி பார்க்கிறார். இந்த சாதியினரை வலுப்படுத்தினால், நாடு தானாகவே வளர்ச்சியடைந்து விடும்" என்று ஜே.பி.நட்டா கூறினார்.


Next Story