மணிப்பூர் வன்முறை; ராணுவம், அசாம் ஆயுத படை உதவியுடன் 23 ஆயிரம் பேர் இதுவரை மீட்பு


மணிப்பூர் வன்முறை; ராணுவம், அசாம் ஆயுத படை உதவியுடன் 23 ஆயிரம் பேர் இதுவரை மீட்பு
x

மணிப்பூர் வன்முறையில் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ஆயுத படை உதவியுடன் இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

இம்பால்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.

கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர்.

வன்முறை மற்றும் பதற்ற சூழலால், இதுவரை அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்து உள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும், அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இணையதள சேவையை முடக்கியும், ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளது.

பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதல்-மந்திரி பிரேன் சிங் கேட்டு கொண்டார். சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கவும், கூடுதல் பாதுகாப்பிற்காகவும் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவழைக்கப்பட்டு உள்ளன.

நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வன்முறை பரவலை அடுத்து, மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் ஒன்றும் நேற்று கூடியது. இதில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, சி.பி.எம். என்.பி.எப். மற்றும் என்.பி.பி. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றன. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய கல்வி இணை மந்திரி டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, மணிப்பூரில் தற்போதுள்ள சூழலில், மாணவர்களால் நீட் தேர்வில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில், பிராட்பேண்ட் மற்றும் இணையதள இணைப்பு பிரச்சனை ஏற்படும்.

அதனால், தேசிய தேர்வு முகமையிடம் (என்.டி.ஏ.) தேர்வு தேதியை மாற்றி அறிவிக்கவோ அல்லது தள்ளி வைக்கவோ செய்யும்படி கேட்டு கொண்டேன். இதன்படி தேர்வு தள்ளி வைப்பு பற்றிய அறிக்கையை என்.டி.ஏ. வெளியிட்டு உள்ளது. 5,751 தேர்வர்கள் மணிப்பூரின் 2 மையங்களில் தேர்வு எழுத இருந்தனர். தேர்வுக்கான புதிய தேதி முடிவு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.

மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து, பொதுமக்களை கலவர பகுதியில் இருந்து மீட்கும் பணியின் ஒரு பகுதியாக, இந்திய ராணுவம் மற்றும் அசாம் ஆயுத படை உதவியுடன் இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் ராணுவ தளங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில், வான்வழி கண்காணிப்பு, ஆளில்லா விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் உள்ளிட்டவற்றை கொண்டு கடந்த 24 மணிநேரத்தில் இந்திய ராணுவம் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு உள்ளது.


Next Story