'சுப்ரீம் கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் செயல்'- பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து சட்ட மந்திரி கருத்து


சுப்ரீம் கோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் செயல்- பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து சட்ட மந்திரி கருத்து
x

பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை செய்துள்ளது.

டெல்லி,

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானார்.

இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த 21-ம் தேதி தடை விதித்தது.

இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் பிபிசி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவில் தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இந்தியா: மோடி கேள்விகள் என்ற பிபிசியின் ஆவணப்படத்தை மத்திய அரசு இந்தியாவில் தடை செய்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ரா, மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் உள்ளிடோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் அனைத்தும் வரும் 6-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், பிபிசி ஆவணப்படத்தை இந்தியாவில் தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சட்ட மந்திரி ரிஜிஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நீதி கிடைக்க தேதிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக்கிடக்கும் சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் பொன்னான நேரத்தை அவர்கள் (பிபிசி ஆவணப்படம் மீதான தடையை எதிர்த்த வழக்கு) இவ்வாறு தான் வீணக்கிக்கின்றனர்.


Next Story