சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? ராகுல் காந்தி


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? ராகுல் காந்தி
x

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி அஞ்சுவது ஏன்? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

கட்சி அலுவலகத்துக்கு அடிக்கல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். அலுவலகத்துக்கான அடிக்கல்லை நாட்டிய அவர்கள் பின்னர் அங்கு நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் கட்சியின் தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மகளிர் இடஒதுக்கீடு மசோதா

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மகளிர் இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் இன்றுகூட அமல்படுத்தலாம். ஆனால் தொகுதி மறுவரையறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கு தள்ளிப்போட அரசு விரும்புகிறது.

இந்த ஒதுக்கீட்டை தற்போதே அமல்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரையும் அதில் சேர்க்க வலியுறுத்துகிறது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தள்ளிப்போட்டு உள்ளது.

இதர பிற்படுத்தப்பட்டோர்

பிரதமர் 24 மணி நேரமும் இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்து பேசுகிறார். அவர்களை மதிப்பது பற்றி பேசுகிறார். பிறகு ஏன் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிரதமர் அஞ்சுகிறார்?

பிரதமரே, சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தியது என்பதை உங்கள் அடுத்த உரையில் இந்தியாவுக்கு சொல்லுங்கள். உங்களிடம் புள்ளிவிவரங்கள் உள்ளன. அதை மக்களுக்கு காட்டுங்கள். மேலும் சாதி அடிப்படையில் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அவமதிக்காதீர்கள். அவர்களை ஏமாற்றாதீர்கள்.

நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை நான் எழுப்பியதும், பா.ஜனதா எம்.பி.க்கள் எனது குரலை ஒடுக்க பார்க்கின்றனர்.

பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள உறவு குறித்து பா.ஜனதா தொண்டர்களிடம் கேட்டால், அவர்கள் நழுவி விடுவார்கள்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

கார்கே, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதைப்போல ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை. மாறாக நடிகர்-நடிகைகள் உள்பட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். இது ஜனாதிபதிக்கு செய்த மிகப்பெரிய அவமதிப்பு ஆகும்.

நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டியபோது கூட அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அவர் தீண்டத்தகாதவர்.

ஒரு தீண்டத்தகாதவர் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தால், இயற்கையாகவே அதை கங்கை நீரால் கழுவ வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்.

இந்தியா கூட்டணி

பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை பா.ஜனதா விரும்பாது. அப்படியிருக்க மோடி அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்ததன் நோக்கம் என்ன?

ஏனெனில் ஏராளமான எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளதால், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த மசோதா குறித்து அவர்களுக்கு நினைவு வந்திருக்கிறது.

ராகுல், சோனியா மற்றும் நான் உள்ளிட்டோர் இணைந்து 'இந்தியா' என்ற யோசனையுடன் வந்ததால், மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்த யோசனை அவர்களின் மனதில் வந்துள்ளது.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.


Next Story