வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: தலைமறைவான மாமனார் கைது


வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: தலைமறைவான மாமனார் கைது
x

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

திருச்சூர்,

மலப்புரம் மாவட்டம் கடவல்லூர் பகுதியை சேர்ந்தவர் சபீனா (வயது 25). இவருக்கும், திருச்சூர் மாவட்டம் கல்லும்புரம் பகுதியை சேர்ந்த அபித் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அபித் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். திருமணத்துக்கு பின்னர் கணவரின் பெற்றோர் வரதட்சணை கேட்டு சபீனாவை துன்புறுத்தி வந்தனர். குறிப்பாக 100 கிராம் நகை கேட்டு தொல்லை கொடுத்தனர்.

இதுகுறித்து அவர் தனது பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவர்கள், திருமணத்தின் போது 40 பவுன் நகை, ரூ.12 லட்சம் கொடுக்கப்பட்டது. அதற்குள் வரதட்சணை கேட்டால் எப்படி தர முடியும் என்றனர். இதையடுத்து வரதட்சணை வாங்கி வராததால் சபீனாவை, அவரது மாமனார் அபூபக்கர் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் சபீனா மனமுடைந்து காணப்பட்டார்.

இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி சபீனா கழுத்தில் தூக்கு கயிறுடன் தனது தாய்க்கு செல்போனில் புகைப்படம் அனுப்பினார். இதை பார்த்த அவரது தாய் செல்போனில் தொடர்பு கொண்டும், சபீனா எடுக்கவில்லை. பின்னர் அங்கு சென்று பார்த்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சபீனாவின் குடும்பத்தினர் சாவில் மர்மம் உள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குன்னங்குளம் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அபித்தின் தந்தை அபூபக்கர், தாய் ஆமினாக்குட்டி ஆகியோர் வரதட்சணை கேட்டு சபீனாவை கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. இதை அறிந்த அபூபக்கர் தலைமறைவானார். இருப்பினும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சபீனாவின் குடும்பத்தினர் திருச்சூர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தனர். இந்தநிலையில் தலைமறைவான அபூபக்கரை நேற்று போலீசார் கைது செய்தனர்.


Next Story