பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

கூடுதல் வரதட்சணை கேட்டு தங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக சித்ராவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

பெங்களூரு,

ராமநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சித்ரா (வயது 30). இவருக்கும், சந்தோஷ் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சந்தோஷ் பெங்களூருவில் கார் டிரைவராக இருந்து வருகிறார்.

இதனால் திருமணத்திற்கு பிறகு சந்தோஷ், தனது மனைவி மற்றும் மகனுடன் பெங்களூரு பீனியா பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் திருமணமானது முதல் சித்ராவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை சந்தோஷ் அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அவரது குடும்பத்தினரும், சித்ராவை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் சித்ரா மனமுடைந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள தனது அறையில் சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பீனியா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வரதட்சணை கொடுமையால் சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதற்கிடையே, சந்தோஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு தங்கள் மகளை கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டதாக சித்ராவின் பெற்றோர், பீனியா போலீசில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story