பெண்ணை கற்பழித்ததாக உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு


பெண்ணை கற்பழித்ததாக உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 15 Oct 2023 7:00 PM GMT (Updated: 15 Oct 2023 7:01 PM GMT)

பெண்ணை கற்பழித்ததாக உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மும்பை,

பெண்ணை கற்பழித்ததாக உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெண் மிரட்டி கற்பழிப்பு

மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவில் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் விஸ்வாஸ் பாட்டீல். இவர் மீது 40 வயது பெண் ஒருவர் ஆசாத் மைதானம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:- 2020-ம் ஆண்டு வழக்கு தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது எனக்கு விஸ்வாஸ் பாட்டீல் அறிமுகம் ஆனார். அப்போது அவர் எனது செல்போன் எண்ணை வாங்கி கொண்டார். 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் வேலை விஷயமாக விஸ்வாஸ் பாட்டீல் என்னை தாதர் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு அவர் மயக்க மருந்து கொடுத்து என்னை கற்பழித்தார். மேலும் என்னை ஆபாசமாக படம் எடுத்து அதை பரப்பிவிடுவேன் என மிரட்டி கற்பழித்து வந்தார்.

உதவி இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

அவரது ஆசைக்கு இணங்கவில்லை எனில் எனது கணவரை போலி என்கவுண்டரில் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டினார். இந்தநிலையில் தற்போது எனது மகளுக்கும் தொல்லை கொடுக்க தொடங்கி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த புகார் குறித்து போலீசார் உதவி இன்ஸ்பெக்டர் விஸ்வாஸ் பாட்டீல் மீது கற்பழிப்பு, தகாத உறவு, மானபங்கம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story