நாட்டின் பல பகுதிகளில் பா.ஜனதாவின் அரசியல் பலம் குறைந்து வருகிறது - சரத்பவார் கூறுகிறார்


நாட்டின் பல பகுதிகளில் பா.ஜனதாவின் அரசியல் பலம் குறைந்து வருகிறது - சரத்பவார் கூறுகிறார்
x
தினத்தந்தி 15 Oct 2023 7:45 PM GMT (Updated: 15 Oct 2023 7:45 PM GMT)

நாட்டின் பல பகுதிகளில் பா.ஜனதா அரசியல் பலம் குறைந்து வருகிறது என சரத்பவார் கூறியுள்ளார்.

மும்பை,

நாட்டின் பல பகுதிகளில் பா.ஜனதா அரசியல் பலம் குறைந்து வருகிறது என சரத்பவார் கூறியுள்ளார்.

சிவசேனா பிளவு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவார் கலந்துகொண்டு பேசியதாவது:- பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் மற்றும் தலைவர்களை மக்கள் ஆதரிக்கவில்லை. இதுதான் இந்தியாவில் நாம் பார்க்கும் காட்சியாக உள்ளது. நீங்கள் நாட்டின் வரைபடத்தை எடுத்து பாருங்கள், பா.ஜனதா தென் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியில் இல்லை என்பதை நீங்கள் பார்க்க முடியும். 2019-ம் ஆண்டு சிவசேனாவை பிளவு படுத்தி தான் மராட்டியத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது. மார்ச் 2020-ம் ஆண்டுவரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த கோவா மற்றும் மத்திய பிரதேசத்திலும் இதே போன்ற பார்முலா தான் பயன்படுத்தப்பட்டது.

குறையும் அரசியல் பலம்

குஜராத்தில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, இமாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் பா.ஜனதா ஆளும் கட்சியில் இல்லை. உத்தரபிரதேசம் மற்றும் ஓரிரு மாநிலங்களை தவிர நாட்டில் மற்ற அனைத்து பகுதிகளிலும் பா.ஜனதாவின் அரசியல் பலம் குறைந்து வருகிறது. தேர்தலுக்கு பின்னர் அரசியல் படம் தெளிவாகும். பா.ஜனதா ஆட்சியை இழந்ததற்கு காரணம் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதுதான். அந்த கட்சி எடுக்கும் முடிவுகள் சாமானியர்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story