வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் 100% மின்சாரம் - மின்வாரிய தலைவர் தகவல்


வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் 100% மின்சாரம் - மின்வாரிய தலைவர் தகவல்
x

விவசாய பணிகளுக்கு மின்சாரம் வழங்கும் சுமார் 270 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன என்று மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த வரலாறு காணாத மழையால் தாமிரபரணி ஆற்றின் இருகரைகளையும் தாண்டி பெருக்கெடுத்த வெள்ளத்தால் பேரிழப்பு ஏற்பட்டது. வீடுகளையும், விளைநிலங்களையும் மூழ்கடித்த வெள்ளம் மக்களை நிலைகுலையச் செய்தது. சாலைகள், பாலங்களையும் சேதப்படுத்தி குடியிருப்புகளை தனித்தீவுகளாக்கியது. வெள்ளம் தணிந்தாலும் அது ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.

இந்த நிலையில், வெள்ளம் பாதித்த தென்மாவட்டங்களில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு 100% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

விளை நிலங்களில் நீர் தேங்கி இருப்பதால் மின்கம்பம் அமைக்க முடியாத நிலை உள்ளது. விவசாய பணிகளுக்கான மின்சாரம் மட்டும் நெல்லை, தூத்துக்குடியில் வழங்கப்படவில்லை. ஜனவரி முதல் வாரத்தில் விவசாய பணிகளுக்கான மின்சாரம் வழங்கும் பணிகள் தொடங்கும். விவசாய பணிகளுக்கு மின்சாரம் வழங்கும் சுமார் 270 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன. 2,700 மின்கம்பங்கள் புதிதாக நடப்பட வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story