கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வருகை - கடந்த 25 நாட்களில் கிடைத்தது


கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வருகை - கடந்த 25 நாட்களில் கிடைத்தது
x

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த 25 நாட்களில் 1.25 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது.

திருவள்ளூர்

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. நீரையும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரையும் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதனால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பெறவில்லை. இந்நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

அதனை ஏற்று கடந்த மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 8-ந்தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 26.70 அடி ஆக பதிவாகியது. 1.095 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 510 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 801 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 8-ந் தேதி முதல் நேற்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story