பாசி வளர்ப்பு நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி; காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் மீது வழக்கு


பாசி வளர்ப்பு நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி; காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 30 Sep 2023 9:00 PM GMT (Updated: 30 Sep 2023 9:00 PM GMT)

சின்னமனூரில் பாசி வளர்ப்பு நிறுவனத்தில் ரூ.2 கோடி மோசடி செய்ததாக காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள தனியார் பாசி வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குனராக சுவீடன் நாட்டை சேர்ந்த பென்ட் என்பவர் உள்ளார். அந்த நிறுவனத்தின் அதிகாரியாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றும் ஜாஸ்பர் நியூபிரபு இருந்து வருகிறார். அவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், "காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகரை சேர்ந்த வெங்கடேஷ்பாபு என்ற இம்மானுவேல் என்பவர், பாசி வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குனர் பென்டிடம் சுமார் ரூ.13 லட்சம் பெற்றுக்கொண்டு அந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். அப்போது அவர், நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் இருந்து சுமார் ரூ.2 கோடியை மோசடி செய்து விட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அந்த புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து இந்த மோசடி குறித்து வெங்கடேஷ்பாபு என்ற இம்மானுவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story