பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் அகதிகளாக வருகை


பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து, கடல் நடுவே மணல் திட்டில் தவித்தனர். கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டனர்.

ராமேஸ்வரம்:

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் தமிழகத்திற்கு 104 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் இருந்து ஹோவர்கிராப்ட் கப்பலில், கடலோர காவல் படையினர் தனுஷ்கோடி அருகே உள்ள இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

நேற்று மாலை 6 மணி அளவில் தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள 1-வது மணல் திட்டில் இலங்கையை சேர்ந்த அகதிகள் 7 பேர் தவிப்பதை பார்த்தனர். தொடர்ந்து அங்கு சென்று 3 குழந்தைகள் உள்ளிட்ட 7 அகதிகளை மீட்டு, கப்பலில் ஏற்றி அவர்களுக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து நேற்று இரவு அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து ராமேஸ்வரம் கடலோர போலீசாரிடம் இரவு 8 மணிக்கு 7 பேரும் ஒப்படைக்கப்பட்டு, மண்டபம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இலங்கை வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த விக்னேசுவரன் (வயது 40), இவருடைய மனைவி ராஜகுமாரி (36) மகன்கள் குமரன் (13), வசி (10) மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமரன் (வயது 38), இவருடைய மனைவி மதினி (வயது 30), மகன் பவின் (6) என்பதும் தெரியவந்தது.

அகதியாக வந்துள்ள ராஜகுமாரி போலீசாரிடம் கூறியபோது, "இலங்கையில் தற்போதைய நிலைமை மோசமாக உள்ளது. குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். எந்த வேலையும் இல்லை. அதனால்தான் தமிழகத்துக்கு தப்பி வந்தோம். தலைமன்னாரிலிருந்து பகல் 12 மணிக்கு பிளாஸ்டிக் படகில் புறப்பட்டோம். 2 படகோட்டிகள் எங்களை அழைத்து வந்தனர். இலங்கை பணம் ரூ.2 லட்சம் அவர்களுக்கு கொடுத்தோம். படகில் வரும்போது குழந்தைகளுடன் கரை சேர்ந்து விடுவோமா என்ற பயம் இருந்தது. அந்த அளவுக்கு பயங்கர காற்றும், கடல் சீற்றமும் இருந்தது" என்று கூறினார்.


Next Story