நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிபத்து ஏ.சி. பெட்டி எரிந்து சேதம்


நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீவிபத்து ஏ.சி. பெட்டி எரிந்து சேதம்
x
தினத்தந்தி 3 Sep 2019 8:45 PM GMT (Updated: 3 Sep 2019 8:19 PM GMT)

கோவை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ.சி. பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது.

கோவை,

நாகர்கோவிலில் இருந்து தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுடன் இணைப்பு ரெயிலாக தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் செல்கிறது. வாஞ்சி மணியாச்சியில் தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் ரெயில், நாகர்கோவில் ரெயிலுடன் இணைக்கப்பட்டு கோவை வரும்.

5 முன்பதிவு பெட்டி, 2 முன்பதிவு செய்யப்படாத பெட்டி, பெண்கள் மட்டுமே பயணம் செய்யும் பெட்டி என்று 10 பெட்டிகள் இதில் இணைக்கப்படும்.

இந்த ரெயில் நேற்று காலை 7.20 மணிக்கு கோவை வந்தது. கோவை ரெயில் நிலையம் வந்ததும் அதில் இருந்த பயணிகள் இறங்கினார்கள்.

பின்னர் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்காக ரெயில்நிலையம் அருகே உள்ள யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து வந்த பி-1 ஏ.சி. பெட்டியில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. தீ மள,மள என்று பரவியது. இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஏ.சி. பெட்டியில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பின்னர்தான் தீயை அணைக்க முடிந்தது. இந்த தீவிபத்தில் ஏ.சி.பெட்டியின் இருக்கைகள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

தீவிபத்து குறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில், கோவை ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்ததும், ரெயில் பெட்டியில் ஏ.சி.யை அணைக்கவில்லை. மேலும் யார்டு பகுதிக்கு ரெயிலை கொண்டு சென்று நிறுத்தியபோதும் ஊழியர்கள் யாரும் இதனை கவனிக்கவில்லை. ஏ.சி.யை யாரும் அணைக்காததால் அதில் இருந்து ஏற்பட்ட தீயே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தீ பரவாமல் அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

ரெயில் பெட்டியில் தீப்பற்றி எரிந்ததை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சேதம் அடைந்த ரெயில்பெட்டியை ரெயில்வே ஊழியர்கள் அகற்றினார்கள். இந்த சம்பவம் கோவை ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story