கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிதி உதவி


கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு: அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிதி உதவி
x
தினத்தந்தி 25 March 2020 12:00 AM GMT (Updated: 24 March 2020 11:54 PM GMT)

கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை, 

நாடு முழுவதும் கொரோனா நோய் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் நோய் தடுப்பு பணிக்கு ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா நோய் நிவாரண பணிக்கு ரூ.3,280 கோடி ஒதுக்கப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கியதும், பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுக்க அ.தி.மு.க. அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. 23-3-2020 அன்று, தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த நான் பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். அவற்றுக்கு இணங்க, விரிவான அறிவிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ், சென்னையில் போலீஸ் கமிஷனரும், பிற மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்கள். இவ்வாணைகள் அனைத்தும் 24-3-2020 அன்று (நேற்று) மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

இதனால், தினக்கூலிகள், விவசாயக்கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி ஓட்டுனர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க அ.தி.மு.க. அரசு முடிவு செய்து, ரூ.3,280 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க நான் ஆணையிடுகிறேன்.

அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக வழங் கப்படும். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும். பொது வினியோகக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க இந்நிவாரணம், டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் வினியோகிக்கப்படும். இந்த ரூ.1,000 நிவாரணம் மற்றும் விலையில்லாப் பொருட்களை பெற விருப்பம் இல்லாதவர்கள், இதற்கான வலைதளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.

ரேஷன் அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறியிருப்பின், ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்.

கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா ரூ.1,000-ம் மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும்.

தற்போது தமிழ்நாட்டில் சிக்கித்தவிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளம் கண்டு, அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். அம்மா உணவகத்தின் மூலமாக சூடான, சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும்.

எந்த வசதியும் இல்லாதோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே, சூடான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும். இதற்கென தேவைக்கு ஏற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்க, சென்னை மாநகர கமிஷனருக்கும், பிற மாவட்ட கலெக்டர்களுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோர்களுக்கு தேவையான உணவினை அவர்கள் வசிக்கும் இடங்களில் வழங்குவதற்கு மாவட்ட கலெக்டர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது வினியோகத் திட்டத்தில் வழங்கப்படும் 1,000 ரூபாயுடன் கூடுதலாக ரூ.1,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு, 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story