அ.தி.மு.க. நிர்வாகிகள் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை


அ.தி.மு.க. நிர்வாகிகள் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Aug 2020 11:15 PM GMT (Updated: 15 Aug 2020 8:47 PM GMT)

கட்சி கட்டுப்பாட்டை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அ.தி.மு.க. நிர்வாகிகள் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

சென்னை, 

‘அ.தி.மு.க. நிர்வாகிகள் தனிப்பட்ட கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்’ என்றும், ‘கட்சி கட்டுப்பாட்டை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமானஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நம் நாடு பெற்ற சுதந்திரமும், அரசியல் சாசனம் தந்த மக்களாட்சி தத்துவமும் ஏழை- எளிய, உழைக்கும் மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், ஒரு குடும்பத்தின் பிடியிலோ, ஒரு குறிப்பிட்ட குழுவின் கைகளிலோ, வலிமை பெற்றவர்களின் கரங்களிலோ இந்த மக்களாட்சி முடங்கிவிடக் கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க.

எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் மீது கொண்ட பேரன்பினாலும், தமிழக மக்கள் அவர் மீது கொண்ட பாசத்தினாலும், நம்பிக்கையினாலும் அ.தி.மு.க. உருவானது. ஜெயலலிதா 35 ஆண்டுகள் தனது உழைப்பையும், அறிவையும் இந்த இயக்கத்திற்காக வழங்கி, அ.தி.மு.க.வை ஒப்பற்ற அரசியல் இயக்கமாக வளர்த்ததோடு, நம்மையெல்லாம் ஆளாக்கி, நம் கைகளில் தமிழ் நாடு அரசின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்.

என்னுடைய காலத்திற்கு பிறகும் நூறு ஆண்டுகள் கழகம் ஆட்சியில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும், மகளிருக்காகவும் உழைத்துக்கொண்டே இருக்கும் என்று சட்டசபையில் ஜெயலலிதா சூளுரைத்தார். இத்தனை பாரம்பரியம் மிக்க நம்முடைய இயக்கம், கட்சியினர் ஒவ்வொருவருடைய உழைப்பாலும் உயர்ந்து கொண்டு வருகிறது.

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரது கனவுகளை நனவாக்க, கட்சியின் லட்சியங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க தமிழ்நாடு அரசு இன்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதை அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர். நாம் தமிழக மக்களுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அதை நோக்கிய பயணத்தில் நாம் அனைவரும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். கடந்த 4 ஆண்டுகளாக அ.தி.மு.க. வையும், ஆட்சியையும், எப்படி மாற்றாரும் பாராட்டும் வண்ணம் வழிநடத்தினோமோ அதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியைப் பெற நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது.

கடந்த சில நாட்களாக கட்சி நிர்வாகிகளில் சிலர் எந்த பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப்பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட்டுவிடாத வகையில், ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், ஜெயலலிதா காட்டிய வழியில் ஜனநாயக ரீதியில் கட்சியின் தலைமை விரிவாக ஆலோசித்து, தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும். எனவே, சிறு சலசலப்புகளுக் கும் இடம் தராமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒன்றுபட்டு உழைத்திட உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கட்சி தொண்டர்கள் மக்கள் பணிகளிலும், கட்சிப் பணிகளிலும் மட்டுமே கவனம் செலுத்துங்கள். கட்சியை வெற்றிச் சிகரத்திற்கு இட்டுச்செல்ல உங்கள் பணிகள் மிகவும் இன்றியமையாதவை.

அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கட்சி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கட்சித் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்து பரிமாற்றங்களை செய்வதன் மூலம் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. எனவே, ஊடக விவாதங்களில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். மக்கள் என்றைக்கும் எம்.ஜி.ஆர். மீதும், ஜெயலலிதா மீதும் பேரன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அந்த அன்பினை நாமும் பெற்றிருக்கிறோம் என்பதே திண்ணம். நாளை நமதே, வெற்றி நமதே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story