தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Jun 2021 9:26 AM GMT (Updated: 16 Jun 2021 9:26 AM GMT)

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில், “தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மற்றும் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

நாளை (ஜூன் 17ஆம் தேதி) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய(திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.

நாளை மறுநாள் (ஜூன் 18ஆம் தேதி) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன்19, 20ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 14 செ.மீ.,தேனி மாவட்டம் பெரியாறு, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 11 செ.மீ.,கோவை மாவட்டம் சின்கோனா, நீலகிரி மாவட்டம் எமரால்ட்டில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகள் ஜூன் 16ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 16, 17ஆம் தேதிகளில் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். 

ஜூன் 17ஆம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

அரபிக்கடல் பகுதிகள் ஜூன் 16 முதல் 18ஆம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். 

ஜூன் 16 முதல் 20 வரை தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். 

ஜூன் 16 முதல் 19ஆம் தேதி வரை மராட்டிய மாநிலம் மற்றும் கோவா கடலோர பகுதிகளில் சூறாவளி மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறுவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story