தெற்கு ஆப்பிரிக்காவில் வன்முறை: இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 July 2021 7:22 PM GMT (Updated: 13 July 2021 7:22 PM GMT)

தெற்கு ஆப்பிரிக்காவில் நடைபெறும் வன்முறையில் இருந்து, இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

தெற்கு ஆப்பிரிக்காவில் நடைபெறும் வன்முறையில் இருந்து, இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெற்கு ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் ஜேக்கப் ஜூமா 1999-ம் ஆண்டு ஆயுதம் வாங்கியபோது, 2 பில்லியன் டாலர் கையூட்டாக பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், ஜூலை 7-ந் தேதி இரவு கைதானார். ‘அவர் குற்றம் அற்றவர், தற்போதைய ஆட்சியாளர்கள் அவரை பழிவாங்க முயற்சிக்கின்றார்கள், விடுதலை செய்யவேண்டும்’ என கூறி அவரது ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுவரை 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களால் அந்த நாட்டில் வாழ்கின்ற இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய வணிக நிறுவனங்கள், சொத்துகளை குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. துணிந்தவர்கள், துப்பாக்கிகளுடன் களம் இறங்கி இருப்பதாக, தமிழ் அமைப்புகளிடம் இருந்து, எனக்கு செய்திகள் வந்தன. எனவே அச்சத்தின் பிடியில் உள்ள தெற்கு ஆப்பிரிக்க இந்தியர்களுக்கு தகுந்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கும் ஆவன செய்ய வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கின்றேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Next Story