புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Nov 2021 7:40 AM IST (Updated: 18 Nov 2021 7:40 AM IST)
t-max-icont-min-icon

தொடர்மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

வங்க கடலில் கடந்த 13-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக நகர்ந்து கொண்டு வருகிறது. அது தற்போது, மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடற்கரை பகுதியை இன்று (வியாழக்கிழமை) நெருங்குகிறது.

மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இந்த நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் இன்று பெய்யக்கூடும். எனவே மேற்சொன்ன மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையத்தால் ‘ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இருக்கிறது. அதி கனமழை என்றால், ஓரிரு இடங்களில் 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகும்.

மேலும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதில் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ‘ஆரஞ்சு அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர்மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.  

1 More update

Next Story