ராமேசுவரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை


ராமேசுவரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை
x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 24 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 21-ம் தேதி 484 விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 3 விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த 25 மீனவர்களை, எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இதையடுத்து 25 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து 25 மீனவர்களும் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 4-ந் தேதி (இன்று) வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 25 பேரில் 24 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல்துறை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஒரு மீனவருக்கு மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைபடகுகளை அரசுடைமை ஆக்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து விரைவில் மீனவர்கள் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story