பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் 3,124 வழக்குகளுக்கு தீர்வு


பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் 3,124 வழக்குகளுக்கு தீர்வு
x

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி உள்ளிட்ட தாலுகா கோர்ட்டுகளில் நடந்த லோக் அதாலத் மூலம் 3,124 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவள்ளூர்

லோக் அதாலத்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு அளித்த உத்தரவின் பேரில், திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தை திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான செல்வ சுந்தரி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

நீதிபதிகள் பங்கேற்பு

மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்ரா தேவி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி கணபதி சாமி, மாவட்ட மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மற்றும் நிரந்தர லோக் அதாலத் தலைவர் நீதிபதி சரஸ்வதி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேலராஸ், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி சாண்டில்யன், சார்பு நீதிமன்ற நீதிபதி சுதாராணி, மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிபதி ஸ்டார்லி, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் முகழாம்பிகை, சத்யநாராயணன், செல்வ அரசி, பவித்ரா, மூத்த வழக்கறிஞர்கள் தொடுகாடு நாகராஜ், சீனிவாசன் மற்றும் வக்கீல்கள், வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

வழக்குகள் சமரசம்

அதேபோல பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, மாதவரம் போன்ற தாலுகா நீதிமன்றங்களில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானமாக செல்லக்கூடிய வழக்குகள் மற்றும் வங்கி சார்ந்த நிலுவையில் அல்லாத வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. அவற்றில் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 4,656 வழக்குகள் சமரச தீர்வு எடுக்கப்பட்டு 2,576 வழக்குகள் முடிக்கப்பட்டு, ரூ.23 கோடியே 2 லட்சத்து 25 ஆயிரத்து 749 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

ரூ.25½ கோடி தீர்வு

நிலுவையில் அல்லாத 548 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2 கோடியே 35 லட்சத்து 60 ஆயிரத்து 672 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் 5,204 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு, அவற்றில் 3,124 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.25 கோடியே 37 லட்சத்து 86 ஆயிரத்து 421 தொகைக்கு தீர்வு காணப்பட்டது. அதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி ஆணைகளை வழங்கினார்.

விபத்து இழப்பீடு

அதிலும் குறிப்பாக திருத்தணி சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் திருத்தணி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சார்பு நீதிபதி காயத்திரி தேவி தலைமையில், குற்றவியியல் நீதித்துறை நடுவர் முத்துராஜ் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது.

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், காசோலை மோசடி, ஜீவனாம் வழக்கு, நஷ்டஈடு வழக்கு, வங்கி வராக்கடன், விபத்து இழப்பீடு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. பின்னர் 150 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 11 லட்சம் மக்கள் நீதிமன்றம் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது.


Next Story