வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு - திருச்சியில் சோகம்


வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு - திருச்சியில் சோகம்
x
தினத்தந்தி 1 Jan 2024 4:24 AM GMT (Updated: 1 Jan 2024 4:56 AM GMT)

புத்தாண்டு தினத்தன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே ரெயில் நகரில் உள்ள காந்திஜி குறுக்கு தெருவில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து என்பவரின் வீட்டின் சுண்ணாம்பு மேற்கூரை நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மாரிமுத்துவின் தாய் சாந்தி, மாரிமுத்துவின் மனைவி விஜயலெட்சுமி, அவர்களின் மகள்கள் பிரதீபா, ஹரினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி 4 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு தினத்தன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story