சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடம் - சுப்ரீம் கோர்ட்டு


சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடம் - சுப்ரீம் கோர்ட்டு
x

அரசு டாக்டர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை 15 நாளில் நிரப்புமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று அழைக்கப்படுகிற உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 2021-22-ம் கல்வி ஆண்டுக்கு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்த அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்தது.

2 பேர் வழக்கு

இந்த நிலையில், நடப்பு 2022-23-ம் கல்வி ஆண்டுக்கு மொத்தம் உள்ள 100 சதவீத இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்துவது குறித்து மத்திய அரசின் பொது சுகாதார பணிகள் தலைமை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்தும், தமிழக அரசு 2020-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் 50 சதவீத இடங்களை அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கி, கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரியும் அரசு டாக்டர்கள் ஸ்ரீஹரிபிரசாந்த் உள்பட இருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு 50 சதவீத இடங்களுக்கு தமிழக அரசு கலந்தாய்வு நடத்தி நிரப்ப அனுமதிப்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மத்திய அரசு விளக்கம்

இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 18-ந் தேதி விசாரித்தபோது, 2021-22-ம் ஆண்டுக்கு மட்டும் அரசு டாக்டர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்துள்ளதாகவும், அடுத்த கல்வி ஆண்டுகளுக்கு நீட்டிக்கவில்லை எனவும் கூறி, மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் அரசாணைக்கு ஐகோர்ட்டு தடை விதிக்காததால், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு அடுத்த கல்வி ஆண்டுகளுக்கும் பொருந்தும் என்பதால் கலந்தாய்வு நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும், இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் பெற அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வக்கீல் சண்முகசுந்தரம் கோரிக்கை விடுத்தார். இதுசம்பந்தமாக எந்த விளக்கமும் பெறத் தேவை இல்லை என மனுதாரர்கள் தரப்பு வக்கீல் சங்கரன் குறிப்பிட்டார்.

வழக்கு முடித்து வைப்பு

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுரேஷ்குமார், கலந்தாய்வு நடத்த தமிழக அரசுக்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு, நடப்பு கல்வி ஆண்டுக்கு பொருந்துமா என்பதை சுப்ரீம் கோர்ட்டுதான் முடிவு செய்ய முடியும் என்பதால், இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசோ, மனுதாரரோ விளக்கம் பெற 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

அதுவரை தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை நிறுத்திவைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் விளக்கம் கோரி வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் நவம்பர் 29-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

இந்த விவகாரத்தின் பின்னணியை மூத்த வக்கீல் பி.வில்சன் எடுத்துரைத்தார். இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி சில விளக்கங்களை அளித்தார். இரு தரப்பு வாதங்களையும் பதிவுசெய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி பிறப்பித்த அரசாணை அடிப்படையில் அரசு டாக்டர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை 15 நாட்களுக்குள் நிரப்ப அனுமதி அளித்தது.

இதில் இடங்கள் மீதியாகிற பட்சத்தில் அவற்றை மத்திய அரசிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டனர்.

இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட விசாரணையை 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story