கொழும்பில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து ரூ.70 லட்சம் தங்கம் கடத்தல் - 2 பெண்கள் கைது


கொழும்பில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து ரூ.70 லட்சம் தங்கம் கடத்தல் - 2 பெண்கள் கைது
x

கொழும்பில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பெண்களை கைது செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.28 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 572 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பெண்ணின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.40 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 815 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 பெண்களிடம் இருந்து ரூ.69 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பெண்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story