இந்த ஆண்டுக்குள் 7,030 புதிய பஸ்கள்: போக்குவரத்துத்துறை தகவல்


இந்த ஆண்டுக்குள் 7,030 புதிய பஸ்கள்: போக்குவரத்துத்துறை தகவல்
x
தினத்தந்தி 3 May 2024 6:16 AM GMT (Updated: 3 May 2024 6:36 AM GMT)

பழுதுகள், விபத்தில்லாத பஸ் இயக்கமே இலக்கு என்று அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 20,260 பஸ்கள் 10,125 வழித்தடங்களில் இயங்கி வருகிறது. தினசரி 18,728 பஸ்களும், வார இறுதி நாட்களில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் அதிகப்படியான சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு, நாளொன்றுக்கு 1.76 கோடி பயணிகள் பயன்பெறுகின்றனர். இதில் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் மகளிர் நலனுக்காக பயணக் கட்டணம் இல்லாமல் இயக்கப்படும் 7,179 பஸ்களின் மூலம் 51.47 இலட்சம் மகளிர் தினசரி பயணிக்கின்றனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் தடத்தில் பழுதடைதல் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகபட்சமாக 10,000 கிலோமீட்டருக்கு 0.10 என்ற அளவில் இருந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் பஸ்களின் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தியதின் காரணமாக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது.

ஊடகங்கள் மூலம் அரசின் கவனத்திற்கு வரும் பழுதுகள் உட்பட, அனைத்து பழுதுகளும் முழுமையாக களையப்படவேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி சரிசெய்யவேண்டும் என 26-04-2024 தேதியில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து தற்போது அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காலமான 2020-21 மற்றும் 2021-22 ஆகிய காலக் கட்டங்களில், போக்குவரத்துக் கழகங்களில் எந்த வருமானமும் இல்லாமல், அதிக நிதி நெருக்கடியில் இருந்த காரணத்தினால், புதிய பஸ்கள் எதுவும் வாங்க இயலாத சூழல் இருந்தது. இதன் காரணமாக வயது முதிர்ந்து பஸ்களின் எண்ணிக்கை அதிகமாகி, 31.12.2023-ன் படி, பஸ்களின் சராசரி வயது 9.13 வருடமாகவும், வயது முதிர்ந்த பஸ்களின் எண்ணிக்கை 10,582 ஆகவும், 52.73 சதவீதமாகவும் இருந்தது.

அரசு கடும் நிதி நெருக்கடியிலும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 2022-23 ல் 1,000 புதிய பஸ்களும், 2023-24 ல் 1,000 புதிய பஸ்களும், 2024-25 ல் 3,000 பஸ்களும், எஸ்.ஏ.டி.பி. (SADP) திட்டத்தின் கீழ் 16 பஸ்களும் மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன்2,666 புதிய பஸ்களும் என 7,682 மொத்தம் புதிய பஸ்கள் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது வரையில் 652 புதிய பஸ்கள் இயக்கப்பட்டு, அதே எண்ணிக்கையிலான வயது முதிர்ந்த பஸ்கள் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,030 பஸ்களும் இந்த நிதி ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வருவதன் மூலம் அதே எண்ணிக்கையில் உள்ள வயது முதிர்ந்த பஸ்கள் அகற்றப்பட உள்ளது.

மேலும், மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் சென்னையில் 1,000 மின்சார பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பஸ்களின் கூண்டினை புதுப்பிக்க 2022-23 ல் 1,000 பஸ்களும், 2023-24 ல் 500 பஸ்களும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரையில் 839 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பஸ்களும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதில் தனிக் கவனம் செலுத்தியதன் காரணமாக 2022-23-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-24 ல் 29 உயிரிழப்புகள் குறைந்துள்ளது. பொதுமக்களுக்கு தட பழுதுகள் மற்றும் விபத்து இல்லாத பஸ் இயக்கத்தை இலக்காக கொண்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறை செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story