விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் இருந்து வண்டலூருக்கு வரும் ஆண் சிங்கம்


விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் இருந்து வண்டலூருக்கு வரும் ஆண் சிங்கம்
x

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு ஆண் சிங்கம் கொண்டு வரப்படுகிறது. பதிலுக்கு ஒரு ஆண் வெள்ளை புலி வழங்கப்படுகிறது.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 1490 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழிலோடு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காவாக அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.

2021-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரித்த காலகட்டத்தில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நீலா, பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. அதே ஆண்டில் உடல்நல குறைவால் கவிதா, புவனா மற்றும் விஜி ஆகிய சிங்கங்களும், பூங்கா மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப் பட்டு வந்த மணி என்ற சிங்கமும் உயிரிழந்தது. இதனால் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பார்வையாளர்கள் வேனில் சென்று சிங்க உலாவிடங்கள் (லயன் சபாரி) பார்க்கும் பகுதி, பார்வையாளர்கள் பார்க்க தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் திறக்க வேண்டும் என பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதனால் பூங்கா அதிகாரிகள், பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் அனுமதி பெற்று மற்ற மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம், சாலை மார்க்கமாக வாகனத்தில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்படுகிறது.

இந்த ஆண் சிங்கத்துக்கு பதிலாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஆண் வெள்ளை புலி, கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு தரப்படுகிறது.

இதனால் வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை உயரும். இதன் காரணமாக இன்னும் சில மாதங்களில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த சிங்கங்கள் உலாவிடம் பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கர்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் மூலம் கொண்டுவரப்படும் ஒரு ஆண் சிங்கம் வருகிற 22-ந் தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்து சேர்ந்துவிடும்.

புதியதாக வரும் சிங்கத்தை தனியாக ஒரு கூண்டில் வைத்து அதற்கு பூங்கா டாக்டர்கள் மூலம் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படும். சில வாரங்களுக்கு பிறகு மற்ற சிங்கங்களுடன் விடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story