பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்: போலீசார் விசாரணை


பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்: போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Oct 2023 4:54 AM GMT (Updated: 18 Oct 2023 6:12 AM GMT)

மணலி புதுநகரில் பூட்டிய வீட்டுக்குள் இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தாய் தனியாக இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை

மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் (வயது 84). போக்குவரத்து கழகத்தில் ஊழியராக வேலைபார்த்த இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகள் ஷீலா (55). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தாயுடன் தங்கி இருந்தார். ஜாஸ்மின் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் நிலையில், அவரை மகள் ஷீலா பராமரித்து வந்ததாக தெரிகிறது. தந்தையின் ஓய்வூதிய பணத்தை வைத்து இருவரும் வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்து ஷீலா வெளியே வரவில்லை. வீடும் பூட்டி கிடந்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று காலை ஷீலாவின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மணலிபுதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து பூட்டிய கதவை உடைத்து சென்று பார்த்த போது, வீட்டில் உள்ள அறையில் ஷீலா இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் அருகில் மனநிலை பாதிக்கப்பட்ட தாய் ஜாஸ்மின் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார்.

இதையடுத்து போலீசார் ஷீலாவின் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகள் இறந்தது தெரியாமல் தாய் ஜாஸ்மின், மகளின் உடல் அருகே 3 நாட்கள் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஷீலா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story