நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்


நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்
x

நடுரோட்டில் மோட்டார்சைக்கிள் தீப்பற்றி எரிந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது 35). இவர் சிவகாசி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பார்சல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை பார்சல் நிறுவனத்துக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் முனீஸ்வரன் செங்கமலநாச்சியார்புரத்துக்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் வேலாயுதம் ரோட்டில் வாகனம் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து முனீஸ்வரன் அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் வாங்கி வந்து வாகனத்தில் ஊற்றி விட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து வாகனத்தை இயக்கி உள்ளார். அப்போது வாகனத்தின் மோட்டார் பகுதியில் இருந்து புகை வெளியேறி உள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் வாகனத்தின் பின்பகுதியில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முனீஸ்வரன் வாகனத்தை நடுரோட்டில் கீழே போட்டு விட்டு ஓடி விட்டதாக கூறப்படுகிறது. தீ மள, மள என மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்தது இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வாலிபர் உயிர் தப்பினார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story